துபை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி இலக்கை விரட்ட முடியாமல் திணறுவது கவலையளிப்பதாக அதன் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
துபையில் செவ்வாய்க்கிழமை 47-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதிடம் தோல்வி கண்டது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி 19 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் அந்த அணி தொடர்ச்சியாக 3-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது. அதில் 2 ஆட்டங்களில் இரண்டாவதாக பேட் செய்து இலக்கை விரட்ட முடியாமல் தோல்வியைச் சந்தித்தது.
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது: இலக்கை விரட்டுவதில் எங்கள் அணி திணறுவது கவலையளிக்கிறது. நாங்கள் முதலில் பந்துவீசுவது என முடிவெடுத்துவிட்டால், அதிக அளவில் ரன்களை வழங்கிவிடுகிறோம். எனவே, நாங்கள் முதலில் பந்துவீசினால், சிறப்பாக பந்துவீசுவது அவசியமாகும். அப்போதுதான் எளிதாக இலக்கை விரட்ட முடியும். இதுவரை எங்களுக்கு அது சரியாக அமையவில்லை. இந்தத் தொடரின் ஆரம்பத்தில் எவ்வளவு புள்ளிகள் பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என எங்களுக்கு ஒரு திட்டம் இருந்தது. ஆனால், இப்போது சூழல் முற்றிலுமாக மாறியிருக்கிறது என்றார்.