செய்திகள்

கரோனாவால் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 7-வது நபர் பாதிப்பு

DIN

நியூசிலாந்துக்குச் சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் 7-வது நபர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தொடர் ரத்தாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடா் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதைத் தொடா்ந்து அடுத்த இரு டி20 ஆட்டங்கள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மௌன்ட் மௌன்கானுய் நகரில் நடைபெறுகின்றன. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் டிசம்பா் 3-ம் தேதி ஹாமில்டனிலும், 2-வது ஆட்டம் டிசம்பா் 11-ம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.

இதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் மூன்று டி20, இரு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. டிசம்பர் 18-ல் டி20 தொடரும் டிசம்பர் 26-ல் டெஸ்ட் தொடரும் தொடங்கவுள்ளன.

லாகூரிலிருந்து நியூசிலாந்துக்குப் புறப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என உறுதியானது. கரோனா அறிகுறிகள் தென்பட்ட ஃபகார் ஸமான், அணியிலிருந்து விலகினார். எனினும் நியூசிலாந்துக்கு வந்திறங்கிய பாகிஸ்தான் அணியினருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆறு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆறு பேரில் எத்தனை வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த மற்றொரு நபரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்தின் சுகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதர பாகிஸ்தான் வீரர்களின் பரிசோதனைகள் முடிவுகளில் அவர்களுக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

நவம்பர் 24 அன்று நியூசிலாந்துக்கு வந்த பாகிஸ்தான் வீரர்கள், 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் வீரர் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT