உலகக் கோப்பைத் தொடருக்குள் 80 ஆயிரம் இந்தியர்களின் வருகையை எதிர்பார்ப்பதாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரக அதிகாரி ஜேன் தாம்ப்ஸன் திங்கள்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
2019 உலகக் கோப்பைத் தொடருக்குள் பிரிட்டனுக்கு 80 ஆயிரம் இந்தியர்கள் வருகையை எதிர்பார்த்துள்ளோம். பொதுவாகவே இந்த காலகட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வருகையின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். அதிலும் தற்போது கிரிக்கெட் உலகக் கோப்பை வேறு நடைபெறுகிறது. எனவே இந்த எண்ணிக்கை அதிகரிப்பதில் ஆச்சரியமில்லை.
கடந்த 12 மாதங்களில் மட்டும் 6 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவை சுற்றுலா விசாக்கள் ஆகும் என்றார்.
நடப்பு தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளின் அனைத்து டிக்கெட்களும் விற்றுத்தீர்ந்து விடுகிறது. குறிப்பாக பிரிட்டனில் வாழும் இந்தியர்கள் அனைவரும் அதிகளவில் திரண்டு வருகின்றனர். மைதானங்களில் பெரும்பாலும் இந்திய ரசிகர்களின் ஆதிக்கமே அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் இந்திய அணியின் ஆட்டம் வெற்றிகரமாக அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது.