ஸ்பெஷல்

ஆஸ்திரேலியாவில் சாதித்த நம்ம சின்னப்பம்பட்டி நடராஜன்!

ச. ந. கண்ணன்

இரு மாதங்களுக்கு முன்பு, ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என்கிற சந்தேகம் நடராஜன் மீது இருந்தது. காரணம், அதற்கு முன்பு இரு வருடங்களாக ஐபிஎல் போட்டியில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. புவனேஸ்வர் குமார், சித்தார்த் கெளல், சந்தீப் சர்மா என இவர்களையே எல்லா ஆட்டங்களிலும் தேர்வு செய்ததால் நடராஜனின் பங்களிப்பு அவசியமில்லாமல் இருந்தது. 

2019-ல் முஷ்டாக் அலி டி20 போட்டியில் தமிழக அணிக்காக 11 ஆட்டங்களில் விளையாடி 13 விக்கெட்டுகள் எடுத்திருந்தார் நடராஜன். எகானமி - 5.84. இது நடராஜன் மீது புது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஐபிஎல் போட்டியின் ஆரம்பத்திலேயே வாய்ப்பு தந்து பார்த்தது சன்ரைசர்ஸ் அணி.

ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தார் நடராஜன். ஐபிஎல் போட்டி முழுக்க விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்குக் கிடைத்தது.

அதற்கு முன்பு, 2017-ல் பஞ்சாப் அணிக்கு ரூ. 3 கோடிக்குத் தேர்வாகி ஆச்சர்யத்தை உண்டாக்கினார் நடராஜன். அந்தத் தருணத்தை அடைய அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.

சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். தந்தை தறி நெசவு நெய்து வந்தார். அம்மா, சாலையோரத்தில் சிக்கன் கடை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார். மூன்று தங்கைகள், ஒரு தம்பி. நடராஜன் மூத்தவர். ஐந்து பேரும் அரசுப் பள்ளியில் படித்துள்ளார்கள். வறுமையான பின்னணி. அரசுப் பள்ளியாக இருந்தாலும் நோட்டுக்களை வாங்கக் கூட முடியாத நிலைமை. எல்லோரையும் போல நடராஜனுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்திருக்கிறது. ஆனால் தெருவில் மட்டும் விளையாடாமல் நண்பர்களுடன் இணைந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதனால் பள்ளியை முடித்தவுடன் கிரிக்கெட் மைதானத்திலேயே எந்நேரமும் இருந்திருக்கிறார். 

பெரிய குடும்பம். மூத்தவனான உன்னை நம்பிதான் குடும்பம் இருக்கு. நீ இன்னும் கிரிக்கெட் விளையாடுறியே என ஊர்க்காரர்களும் வீட்டில் அப்பா அம்மாவும் கூறி கிரிக்கெட் ஆர்வத்தைக் கேள்வி எழுப்பியபோது உதவ முன்வந்துள்ளார் ஜெயபிரகாஷ். ஊரில் ஜெயபிரகாஷின் கிரிக்கெட் அணியில் டென்னிஸ் பந்து ஆட்டங்களில் விளையாடியுள்ளார் நடராஜன். அவருடைய அணி போட்டிகளில் நன்கு விளையாடியதால் அதில் சேரவேண்டும் என்று முதலில் ஆசைப்பட்டு அதேபோல தேர்வாகி, பிறகு ஜெயபிரகாஷையும் தன் திறமையால் கவர்ந்துள்ளார். நல்ல வேகத்தில் பந்து வீசுகிறாய் என்று நடராஜனிடம் முதலில் சொன்னவர் ஜெயபிரகாஷ் தான். என் வீட்டுக்கு வந்து, பையனை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் ஜே.பி. அண்ணா. இதனால் தான் ஐபிஎல் உடையில் ஜேபி நட்டு என்று என் பெயருடன் அவருடைய பெயரையும் இணைத்துள்ளேன் என்கிறார் நடராஜன் நன்றி உணர்வுடன். கையிலும் ஜேபி என பச்சை குத்தியிருக்கிறார்.

நடராஜனைக் கல்லூரியில் படிக்க வைத்தது மட்டுமில்லாமல் கிரிக்கெட் ஆட்டங்களுக்காக சென்னைக்கு அழைத்து வந்து உடைகள் வாங்கித் தருவது என எல்லாவிதமாகவும் இருந்துள்ளார் ஜெயபிரகாஷ். சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத நிலையில் என்னை முழுமையாகப் பார்த்துக்கொண்டார் ஜெயபிரகாஷ் அண்ணா என உருகுகிறார் நடராஜன். இந்தியாவில் நடராஜன்கள் உருவாக ஜெயபிரகாஷ்கள் தேவை. 

10 வயதிலிருந்து டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் அதிகம் விளையாடியுள்ள நடராஜன், 20 வயதுக்குப் பிறகுதான் கிரிக்கெட் பந்தில் விளையாட ஆரம்பித்துள்ளார். 

சேலத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடும்போதுதான் யார்க்கர் பந்துவீச்சை நன்குக் கற்றுக்கொண்டிருக்கிறார். டென்னிஸ் பந்து பிட்ச் ஆனவுடன் வேகத்தை இழந்துவிடும். இதனால் வீசிய வேகத்தில் பேட்ஸ்மேனிடம் பந்து செல்லவேண்டும் என்றால் அதற்கு யார்க்கர் பந்தை வீசுவதுதான் சரி என உணர்ந்து அதை முயற்சி எடுத்துக் கற்றுக்கொண்டிருக்கிறார் நடராஜன். 

ஜெயப்பிரகாஷ் மூலம் சென்னையில் 4-வது டிவிஷன் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்குக் கிடைத்துள்ளது. இங்கிருந்துதான் நடராஜனின் கிரிக்கெட் வாழ்க்கை முறையாகத் தொடங்கியிருக்கிறது.  

வேகப்பந்து வீச்சாளருக்கு நல்ல ஷூ முக்கியம். இரு வருடங்கள் ஷூ இல்லாமல் வெறுங்காலில் பயிற்சிகள் மேற்கொண்டதாகக் கூறுகிறார் நடராஜன். இவர் விளையாடும் அணிகள் நல்ல ஷூக்களை வாங்கித் தந்தால் அதை ஒரு வருடத்துக்குப் பத்திரமாகப் பார்த்துகொள்வார். சென்னைக்கு வந்து விளையாட ஆரம்பித்தவுடன் தமிழ்நாடு கிரிக்கெட்டின் வரலாறு, அதன் மகிமையை அறிந்தார். இதனால் தமிழக ரஞ்சி அணியில் விளையாட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் தமிழக ரஞ்சி அணியில் விளையாடுபவர்கள் யு-19, யு-22 கிரிக்கெட் அணிகளில் இடம்பிடித்த பிறகுதான் ரஞ்சி அணியில் நுழைய முடியும். அந்தளவுக்கு அது ஒரு இரும்புக்கோட்டை. ஆனால் இந்த அணிகளில் விளையாடாமல் நேரடியாக ரஞ்சி அணியில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது. 

2015-ல் ரஞ்சியில் விளையாடுகிறார். முதல் ஆட்டத்திலேயே விதிமுறைகளை மீறி பந்துவீசுகிறார் என்று புகார் எழுந்தது. இதனால் பந்துவீசும் முறையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருவருடம் போராடினார். ரஞ்சி அணி வரைக்கும் வந்தும் முடங்கிப் போய்விட்டேனே என கவலைப்பட்டுள்ளார். பந்துவீசும் முறையை மாற்றுவதற்கே ஒரு வருடம் ஆகியிருக்கிறது. பயிற்சியாளர்கள் பலர் ஊக்கப்படுத்தியதால் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும் ஏற்பட்டுள்ளது. பந்துவீசும் முறையை மாற்றிய பிறகு டிஎன்பிஎல் டி20 ஆட்டத்தில் விளையாடினார். ஒரு வருடம் விளையாடாமல் இருந்ததால் வெறியுடன் அப்போட்டியில் பங்கேற்றார். நடராஜன் வெள்ளைப் பந்தில் விளையாடிய முதல் போட்டி அதுதான்.

2016 டிஎன்பிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் எடுத்தார். சூப்பர் ஓவர் ஒன்றில் தொடர்ச்சியாக ஆறு யார்க்களை வீசினார். அபினவ் முகுந்த் களத்தில் இருந்தும் நடராஜனின் துல்லியமான யார்க்கர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. அதுதான் நடராஜனுக்குப் பெரிய அடையாளமாக மாறியது. அந்தத் தருணத்திலிருந்து வேறு வாழ்க்கை அமைந்தது. டிஎன்பிஎல் போட்டியும் அந்த சூப்பர் ஓவர் யார்க்கர்களும் அமையாமல் போயிருந்தால் நடராஜனின் வாழ்க்கை என்னவாகியிருக்கும்?

டிஎன்பிஎல் போட்டியில் அசத்தியதால் 2017 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு நடராஜனைத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. ஆனாலும் ஆறு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார்.  2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். எகானமி - 9.07. இதனால் நடராஜன் வேண்டாம் என பஞ்சாப் அணி அவரை விடுவித்தது.

இதன்பிறகு காயம் காரணமாக ரஞ்சி போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அப்போதுதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அடுத்த ஐபிஎல் ஏலத்தில் நடராஜனைத் தேர்வு செய்தது, ரூ. 40 லட்சத்துக்கு. பலனில்லை. 2018, 2019 ஐபிஎல் போட்டிகளில் நடராஜனால் ஒரு ஆட்டத்திலும் விளையாட முடியாமல் போனது. அந்தளவுக்குப் பலமான வேகப்பந்துவீச்சாளர்களை வைத்திருந்தது சன்ரைசர்ஸ் அணி.

ஐபிஎல்-லில் ரூ. 3 கோடி சம்பளம் பெற்றவுடன் தன்னிடமுள்ள நல்ல மனத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல்-லில் விளையாட ஆரம்பித்த பிறகு எங்கும் வேலைக்குப் போகக்கூடாது என பெற்றோர்களிடம் சொல்லிவிட்டார். இப்போது மூன்று சகோதரிகளில் ஒருவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. இரு சகோதரிகள் படித்து வருகிறார்கள். தம்பி படித்து முடித்துவிட்டார். முன்பு படிக்க வழியில்லை. இப்போது அவர்கள் என்ன படிக்க விரும்பினாலும் அதை என்னால் செய்து தர முடியும் என்று குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார் நடராஜன். 

ஐபிஎல் போட்டியில் நிரந்த இடம் கிடைக்காத போதும் அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு சொந்த ஊரில் கிரிக்கெட் அகாடமி ஆரம்பித்துள்ளார். இன்றைக்கு அதில் 60 பேர் வரைக்கும் கிட்டத்தட்ட இலவசமாக கிரிக்கெட்டைப் பயின்று வருகிறார்கள் (மைதானப் பராமரிப்புக் கட்டணம் மட்டும் வாங்குகிறார்). அதிலிருந்து நிறைய பேர் சென்னை லீக் போட்டிகளில் விளையாடுகிறார்கள். டிஎன்பிஎல் போட்டியில் மூவர் தேர்வாகி, பெரியசாமி டிஎன்பிஎல் நட்சத்திரமாகியிருக்கிறார். 

இந்த வருடம் கரோனா ஊரடங்கில் தனது உடற்தகுதியை நன்கு மேம்படுத்தியிருக்கிறார் நடராஜன். எடை தூக்கும் பயிற்சிகளில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளார். இதன்மூலம் அதிக வேகத்துடனும் நீண்ட நேரம் உற்சாகம் குறையாமலும் பந்துவீச முடியும் என்று உணர்ந்துள்ளார். 

இந்த வருடம் நடராஜனின் திறமையை அறிந்து ஆரம்பத்திலேயே வாய்ப்பளித்தது சன்ரைசர்ஸ் அணி. இதற்காகக் காத்திருந்த நடராஜன், தன் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்தார். பேட்ஸ்மேன்களை போட்டி முழுக்க திணறடிக்கப் போகிறார் என்பதை யாருமே முதலில் எண்ணவில்லை. 

முதல் ஆட்டத்தில் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், நடராஜனுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார். டி20 ஆட்டங்களில் பந்துவீச்சாளர்களின் பலமாக இருக்கும் யார்க்கர்களைத் தொடர்ந்து பயன்படுத்த தொடங்கினார். யார்க்கர் பந்துவீச்சு தானே ஐபிஎல் போட்டியில் முதலில் வாய்ப்பளித்தது, அதையே ஆயுதமாகப் பயன்படுத்துவோம் என்றெண்ணி, ஒரு முடிவுடன் பந்துவீசத் தொடங்கினார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் யார்க்கருக்கென்றே புகழ்பெற்ற பும்ரா உள்ளிட்ட பல பிரபல பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடியும் நடராஜன் அளவுக்கு வேறு யாராலும் யார்க்கரில் நிபுணத்துவம் பெற்று அதிகமுறை வீச முடியவில்லை. இதனால் நடராஜன் விளையாடுகிற ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் வீசுகிற யார்க்கர்களுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் எனப் பலரும் நடராஜனைக் கவனிக்க ஆரம்பித்து அவரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் எழுதினார்கள்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார் நடராஜன். அதில் 58 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் ஒன்று, பிளேஆஃப்பில் வீழ்த்திய டி வில்லியர்ஸின் விக்கெட்.  

ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.02. 

உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸி. முன்னாள் வீரர் பிரெட் லீ, நடராஜன் பற்றி ட்விட்டரில் கூறியதாவது: ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் இப்படித்தான் பந்துவீச வேண்டும். அபாரம் நடராஜன் என்றார். இந்திய முன்னாள் வீரர் சேவாக் ட்வீட் செய்ததாவது: நடராஜனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். யார்க்கர் பந்துகளை அற்புதமாக வீசியுள்ளார் என்றார். இந்திய அணியில் விளையாடாத ஒரு வீரர், இந்த அளவுக்குத் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசுவதை இதுவரை பார்த்ததில்லை என நடராஜனைப் பாராட்டி  ட்வீட் வெளியிட்டார் முன்னாள் வீரர் இர்பான் பதான். 

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு, இணையம் வழியாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் வீரர் கபில் தேவ், நடராஜனைப் பற்றியும் யார்க்கர் பந்துவீச்சு பற்றியும் கூறியதாவது: ஐபிஎல் 2020 போட்டியில் என்னுடைய கதாநாயகன் நடராஜன் தான். அந்த இளம் வீரருக்குப் பயமே இல்லை. தொடர்ந்து ஏராளமான யார்க்கர்களை வீசினார். யார்க்கர் தான் சிறந்த பந்து. இன்று மட்டுமல்ல, கடந்த 100 வருடங்களாகவே. யார்க்கர் வீசுவதற்கான அடிப்படைகளைச் சரியாக அவர் பின்பற்றினார் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் முதலில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நடராஜன் தேர்வானார். எனினும் நடராஜனை டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகமாகின. பும்ராவுடன் இணைந்து கடைசி ஓவர்களில் நடராஜன் பந்துவீசினால் ஆஸி. அணிக்கு நெருக்கடி தர முடியும் எனப் பலரும் எண்ணினார்கள். 

இந்திய அணிக்கு மட்டுமில்லாமல் டி20 உலகக் கோப்பைக்கும் நடராஜன் தேர்வாக வேண்டும் என்று முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறினார். இதுபற்றி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: அடுத்த வருடம் உலகக் கோப்பை நடைபெறுகிறது. இறுதி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக் கூடிய ஒருவர் இந்திய அணிக்குத் தேவை. கடைசி ஓவர்களில் ஷமியும் சைனியும் நன்றாக வீசுவதைப் பார்ப்பது நன்றாக உள்ளது. இடது கை பந்துவீச்சாளராக இருப்பதால் எதிரணிக்கு நடராஜனால் ஆச்சர்யம் அளிக்க முடியும். ஐபிஎல் போட்டியில் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்ட பிறகு கலீல் அஹமத்துக்கு வாய்ப்பளிப்பதை விடவும் நடராஜனுக்கே முன்னுரிமை அளித்தோம். பயிற்சியின்போது அற்புதமாகப் பந்துவீசி நம்பிக்கை ஏற்படுத்தினார். யார்க்கர் பந்தை விடவும் வேறு விதமாகவும் அவரால் சிறப்பாகப் பந்துவீச முடியும். ஆனால் அதை ஐபிஎல் போட்டியில் அவர் பயன்படுத்தவில்லை. கூர்மையான பவுன்சர், ஸ்லோ பால், ஆஃப் கட்டர் என பலவகைப் பந்துகளை அவரால் வீச முடியும். மிகவும் கடினம் என எண்ணக்கூடிய யார்க்கர் பந்துகளை மிகுந்த நம்பிக்கையுடன் வீசுவார் என்றார். நடராஜன் என்றால் யார்க்கர் பந்துவீச்சு தான் என்று பலரும் எண்ணும்போது நடராஜனிடம் மற்ற பந்துவீச்சுத் திறமைகளும் உண்டு என நம்பிக்கையூட்டினார் லக்‌ஷ்மண்.

எல்லோருடைய ஆசையும் நிறைவேறியது. ஒன்றல்ல, இரு அணிகளுக்குத் தேர்வானார் நடராஜன்.

தமிழகச் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து விலகினார். இதனால் நடராஜன், டி20 அணியில் முதலில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் சைனிக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் மாற்று ஏற்பாடாக நடராஜன் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். கடைசியில் சைனிக்குப் பதிலாக மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றார். 

காம்பெராவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி, பவர்பிளேயில் விக்கெட் எடுக்காத குறையைத் தீர்த்தார். ஆஸி. வீரர் லபுசானே, நடராஜன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். தனது முதல் ஒருநாள் ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார் நடராஜன்.

கிரிக்கெட் வீரர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் நடராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். நேற்றைய தினம், சமூகவலைத்தளம் முழுக்க நடராஜனைப் பற்றிய பேச்சாக இருந்தது. நடராஜனின் இந்தச் சாதனையை தங்கள் வீட்டுப் பிள்ளை ஒருவர் சாதித்ததாகவே தமிழர்கள் எண்ணினார்கள். இந்திய அணிக்காக விளையாடுவது வித்தியாசமான அனுபவம். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. கூடுதல் சவால்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று ட்வீட் வெளியிட்டுள்ளார் நடராஜன். 

இந்திய அணியில் 29 வயது ஆகிவிட்ட ஒரு வீரரைப் புதிதாகச் சேர்க்க மிகவும் யோசிப்பார்கள். 29 வயதில் இந்தியாவுக்கு வெகுசில வேகப்பந்து வீச்சாளர்களே தேர்வாகியுள்ளார்கள். 1958-ல் குலாம் கார்ட், டெஸ்டுக்குத் தேர்வானார். 1994-ல் புபிந்தர் சிங் சீனியர் ஒருநாள் ஆட்டத்துக்கும் 2014-ல் பங்கஜ் சிங்கும் 2015-ல் எஸ். அரவிந்தும் 29 வயதில் தேர்வானார்கள். அதற்குப் பிறகு தேர்வான 29 வயது வீரர் நம்ம நடராஜன். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, இப்படியெல்லாம் தன் வாழ்க்கை மாறும் என்று நடராஜனால் கனவு கூட கண்டிருக்க முடியாது. 

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், இந்திய அணிக்குத் தேர்வான நடராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியை நாங்கள் சரியாக ஆரம்பிக்கவில்லை. ஆனால் 4, 5 வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டபோதும் கடைசிப் பகுதியில் தொடர்ச்சியாக வெற்றிகள் பெற்றோம். ஐபிஎல் போட்டியை முடித்த விதத்தில் எங்கள் அணி வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். அடுத்த வருடம் இன்னும் ஒரு படி முன்னேறி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவோம். நட்டுவுக்குப் (நடராஜன்) பாராட்டுகள். உங்களை ஆஸ்திரேலியாவில் சந்திக்கிறேன் என்றார். ஆனால் நடராஜன் இந்திய அணிக்குள் வருவதற்கு முன்பு காயம் காரணமாக ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து வார்னர் விலகிவிட்டார். இதனால் நடராஜனுக்கு எதிராக விளையாட இன்னும் பல மாதங்கள் வார்னர் காத்திருக்க வேண்டும்.

கிரிக்கெட் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கையிலும் நடராஜனுக்கு இது சந்தோஷமான காலக்கட்டம் தான். பள்ளியில் தன்னுடன் படித்த பவித்ராவை 2018 ஜூன் மாதம் திருமணம் செய்தார். ஐபிஎல் போட்டியின்போது பெண் குழந்தைக்குத் தந்தையானார் நடராஜன். குழந்தை பிறந்த பிறகு விளையாடிய ஆட்டத்தில் டிவில்லியர்ஸை யார்க்கர் பந்து மூலம் போல்ட் செய்தார் நடராஜன். இரட்டிப்புச் சந்தோஷம் என்பது இதுதான். 

எளிமையான வாழ்க்கைப் பின்னணியில் இருந்து வந்த நடராஜன் முதலில் ஆசைப்பட்டது, ஜெயபிரகாஷ் அண்ணனின் டென்னிஸ் பந்து அணிக்குத் தேர்வாக வேண்டும் என்பதுதான். அடுத்ததாக தமிழக ரஞ்சி அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று கனவு கொண்டார். ஆனால் அவருடைய திறமையும் உழைப்பும் பொறுமையும் ஆஸ்திரேலியா வரைக்கும் கொண்டு சென்றுள்ளது. திறமைசாலிக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT