ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் 12-வது ஆட்டத்தில் இன்று (புதன்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். நரைன் ஓரளவு அதிரடி காட்டி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 15 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, கில் மற்றும் நிதிஷ் ராணா சிறப்பாக விளையாடினர். 2-வது விக்கெட்டுக்கு துரிதமாக 46 ரன்கள் சேர்த்த நிலையில், 22 ரன்கள் எடுத்திருந்த ராணா தெவாதியா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ஆண்ட்ரே ரஸல் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். ஆனால், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில்லும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ரஸலுடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். இந்த சீசனில் இதுவரை அதிரடி காட்டாத ரஸல், இந்த முறை அதற்கான அடித்தளமாக சிக்ஸர்கள் அடிக்கத் தொடங்கினார்.
ஆனால், கார்த்திக் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ரஸலும் ராஜ்புத் பந்தில் ஆட்டமிழந்தார். ரஸல் 3 சிக்ஸர்கள் உள்பட 24 ரன்கள் எடுத்தார்.
இதனால், கொல்கத்தா பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது. கம்மின்ஸும் இந்த முறை பேட்டிங்கில் சோபிக்காமல் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனினும், மார்கன் மட்டும் 20வது ஓவர் வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் துரிதமாக ரன் சேர்த்து விளையாடி வந்தார். இதனால், அந்த அணி 150 ரன்களைக் கடந்தது.
கடைசி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கன், 20-வது ஓவரின் 3-வது பந்தில் சிக்ஸர் அடித்தார். இதனால், நெருக்கடிக்குள்ளான டாம் கரண் தொடர்ச்சியாக 3 வைட் பந்துகளை வீசினார். எனினும், கடைசி பந்தில் ரன் ஏதும் கிடைக்கவில்லை.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இயான் மார்கன் 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் அணித் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும், தெவாதியா, ராஜ்புத், கரண், உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.