துபை: பதிமூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி இந்த சீசனை மறக்க முடியாத சீசனாக்க விரும்புவதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த கே.எல்.ராகுல் மேலும் கூறியதாவது:
எங்கள் அணி சிறப்பான அணியாக உள்ளது.
நாங்கள் இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சீசனை மறக்க முடியாத சீசனாக்க விரும்புகிறோம். வீரர்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடும், உத்வேகத்தோடும் இருக்கிறோம். இந்த சீசனில் விளையாடுவதில் மிகுந்த உற்சாகமாகவும் இருக்கிறோம்.
இந்த சீசன் எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது சவாலானதுதான்.
எனினும் எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்காக நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவருமே கடினமான உழைப்பாளிகள். எங்கள் அணி இளமை, அனுபவம் என சமபலம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட அணியாக உள்ளது என்றார்.