டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததால் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், இந்திய அணியின் ஒருநாள், டி20 அணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 13 டெஸ்டுகள், 16 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 23 வயது ரிஷப் பந்த். டெஸ்டில் தலா இரு சதங்களும் அரை சதங்களும் எடுத்துள்ள பந்த், ஒருநாள்-டி20 ஆட்டங்களில் மொத்தமாக 3 அரை சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
மேலும் இந்த வருட ஐபிஎல் போட்டியிலும் அவர் சுமாராகவே விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 217 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு அரை சதம் கூட எடுக்கவில்லை. 8 ஆட்டங்களில் 6 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார்.
ஆனால் சஞ்சு சாம்சனோ 12 ஆட்டங்களில் விளையாடி 326 ரன்கள் எடுத்துள்ளார். 3 அரை சதங்களுடன் 23 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதுதவிர ஒருநாள், டி20 ஆட்டங்களில் இந்திய அணியின் புதிய விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் செயல்படுகிறார். நியூசிலாந்து தொடரில் விக்கெட் கீப்பிங் செய்ததோடு சிறப்பாகவும் பேட்டிங் செய்ததால் அவருடைய பொறுப்பை மேலும் அதிகமாக்கப்பட்டுள்ளது. ஆஸி. சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியின் துணை கேப்டனாகத் தேர்வாகியுள்ளார்.
இந்தக் காரணங்களை முன்வைத்து ஒருநாள், டி20 அணிகளில் இருந்து ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளார். எனினும் டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிரடி மன்னன், தன் திறமையை மீண்டும் நிரூபித்து ஒருநாள், டி20 தொடர்களில் மீண்டும் இடம்பெற வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம்.