இந்திய சுதேச சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பு - இலந்தை சு இராமசாமி; பக். 240; ரூ.270; சுவாசம் பதிப்பகம், சென்னை-17; ✆ 81480 66645.
ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்தியா 1947-இல் விடுதலை பெற்றது. பல்லாண்டுகள் தங்களால் ஆளப்பட்ட இந்திய நிலப்பரப்பு ஒரே நாடாக விடுதலை பெறுவதை பிரிட்டன்
விரும்பவில்லை. எனவே, சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த சமஸ்தானங்கள் தாங்கள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் எதில் விருப்பம் உள்ளதோ அதில் இணையலாம் அல்லது தனித்தும் இருக்கலாம் என்றது பிரிட்டன்.
தங்களது ஆடம்பர வாழ்க்கையை இழக்க விரும்பாத சுதேச சமஸ்தான மன்னர்கள் பெரும்பாலோர் இந்தியாவுடன் இணைய விரும்பாமல் முரண்டு பிடித்தனர். ஜுனாகாட்,
ஹைதராபாத் போன்ற சமஸ்தானங்கள் மத அடிப்படையில் பாகிஸ்தானுடன் இணைய விரும்பின. அப்போது இருந்த சமஸ்தானங்களின் எண்ணிக்கை 565.
இவற்றை பலவிதமான தந்திர உபாயங்களுடன் பாடுபட்டு இணைத்தவர்கள், அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலும், அன்றைய மத்திய அரசின் செயலராக இருந்த வி.பி.மேனனும் தான்.
பிரிட்டன் ஆட்சிக்கு முன் அரசியல்ரீதியாக ஒரே நாடாக இருந்திராதபோதும் ஆன்மிகரீதியாக இந்தியா ஒரே நாடாகத் திகழ்ந்ததைக் குறிப்பிட்டே நூல் தொடங்குகிறது. அன்றைய சுதேச மன்னர்களின் களியாட்டங்கள், அடக்குமுறை ஆட்சி, ஆங்கிலேயரிடம் அடிமையுணர்வு ஆகியவற்றை தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார் நூலாசிரியர்.
எனினும், வாக்குறுதிகளை மீறி மன்னர் மானியத்தை ஒழித்ததையும், ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா உருவான ஆரம்பகால நாள்களை அற்புதமாக விளக்குகிறது இந்நூல். வரலாற்று ஆர்வலர்களுக்கு இந்நூல் மிகவும் பிடிக்கும்.