கோமாளியாக்கப்பட்ட கோமான் முஹம்மத் பின் துக்ளக் - செ.திவான்; பக். 144 ; ரூ.100; நியூஸ் மேன் பப்ளிகேஷன்ஸ் - மதுரை; 0452-4396667.
முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களே முகமது பின் துக்ளக்கை தாக்கி எழுதியதாகத்தான் வரலாற்றுப் பதிவாக உள்ளது.
இதற்கான காரணமும், முகமது பின் துக்ளக் மீது சுமத்தப்படும் தவறுகளைக் களையும் வகையில் பல்வேறு வரலாற்று நூல்களில் உள்ள ஆய்வுகளையும், வரலாற்று ஆசிரியர்களின் எடுத்துக்காட்டுகளையும், வெளிநாட்டு நூலகங்களில் உள்ள குறிப்புகளையும் மேற்கோள் காட்டி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
தில்லியில் கி.பி. 1325 முதல் 1351 ஆண்டு வரை முகமது பின் துக்ளக் ஆட்சி செய்தார். தனது சொந்த தந்தையைக் கொன்றுவிட்டு அரியணை ஏறினார். தலைநகரை தில்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றம் செய்தது, அவர் கொண்டு வந்த அடையாள பணத் திட்டம் தோல்வியடைந்தது போன்ற வரலாற்று அவதூறுகளையும், அதில் உள்ள உண்மைகளையும் தீர ஆராய்ந்து இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. முகமது பின் துக்ளக்கின் 26 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் மாபார் (தமிழ்நாடு) நகரம் உள்பட 23 நகரங்கள் செல்வச் செழிப்போடு இருந்தன, 93 துறைமுகங்கள் வெளிநாட்டு வர்த்தகக் கேந்திரங்களாகத் திகழ்ந்தன உள்ளிட்ட பல அரிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
படித்தறிய வேண்டிய தகவல்கள் நிறைய இடம்பெற்றுள்ள நூல் இது.