வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் - பாகம்-1; - பெ.சிவசுப்ரமணியம்; பக். 380; ரூ.400; சிவா மீடியா, 489/ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அண்ணாநகர், ஆத்தூர் -636102.
பத்திரிகையாளரான நூலாசிரியர், வீரப்பனோடு சுமார் எட்டு ஆண்டுகள் தொடர்பில் இருந்திருக்கிறார். அதன் அடிப்படையில், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தக்க ஆதாரங்கள், புகைப்படங்களோடு இந்நூலில் விவரிக்கிறார்.
வீரப்பனை மையமாகக் கொண்ட ஒவ்வொரு நிகழ்விலும் தற்போது உயிருடன் இருக்கும் வீரப்பனுடைய அன்றையக் கூட்டாளிகள், தமிழக - கர்நாடக வனத் துறையினர், காவல் துறையினர், அதிரடிப் படையினர், பழங்குடிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் பேட்டிகளையும் இணைத்திருப்பது இந்நூலுக்கு வலு சேர்க்கிறது.
வீரப்பனின் இளமைப் பருவம் முதல் 1991-ஆம் ஆண்டு வரை வீரப்பனின் வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் நல்லவரா? கெட்டவரா? அவரை மையப்படுத்தி பரப்பப்பட்ட வீர தீரக் கதைகளில் எது உண்மை? எது பொய்? காவல் துறையினரின் ஆவணங்கள் கூறுவதுபோல 123 பேர்களை அவர் கொலை செய்தாரா? வீரப்பனுக்குத் தவறான தகவல்களை அளித்து, அவரைத் தூண்டிவிட்டவர்கள் யார்? வாழ்நாள் முழுவதும் காடுகளில் தலைமறைவாக வாழவேண்டிய அவசியம்தான் என்ன? தலைமறைவு வாழ்க்கையை கைவிட்டு சராசரி மனிதரைப்போல வாழ வேண்டும் என்ற எண்ணம் வீரப்பனுக்கு இருந்ததா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்நூல் விரிவாக விடையளிக்கிறது.
காட்டில் ஒளிந்திருக்கும் வீரப்பனைப் பிடிப்பதற்கான ஒவ்வொரு முயற்சிகளிலும் அவரது கூட்டாளிகளும், அப்பாவி பொதுமக்கள் பலரும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் சிறைக் கம்பிகளுக்கிடையே தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துள்ளனர். இதற்கு பழிக்குப் பழி வாங்கும்விதமாக காவல் மற்றும் வனத் துறையினர் வீரப்பனால் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழக - கர்நாடக வனங்களில் உள்ள மரங்கள், வன விலங்குகள், பழங்குடிகள், அங்கு வசிக்கும் பொதுமக்களின் சமூகப் பொருளாதாரச் சூழல்கள், அணைகள், ஆறுகள் குறித்த பல்வேறு தகவல்களையும் நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்துள்ளார். வீரப்பனை பல்வேறு பரிமாணங்களில் இந்நூல் படம் பிடித்துக்காட்டுகிறது.