திருமூலர் திருமந்திரத்தில் மருந்தில்லா மருத்துவம் - ப.செந்தில்நாயகம்; பக்.184; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; -044- 2536 1039.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்ற அடிப்படையில் உடலை அணுகும் கண்ணோட்டம் திருமூலருடையது. மனிதனுள் இருக்கும் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து பல்வேறு ஆற்றல்களை வெளிக் கொணர்வது திருமூலரின் ஞான யோகக் கலையாகும். மனிதனில் மறைந்துள்ள அளப்பரிய ஆற்றலை முறையான ஈடுபாட்டினால் வெளிப்படச் செய்து பயனுறுவது திருமூலரின் அறிவியல் நுட்பமாகும் என்கிறார் நூலாசிரியர்.
யோகம், தியானம், இசை கேட்பது ஆகியவற்றின் மூலமாகவும் உடல் நலத்தை நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மூலமாகவும் மன, உடல் நலத்தைப் பேணலாம் என்பதை திருமந்திரத்தில் இருந்து பல எடுத்துக்காட்டுகளின் மூலம் இந்நூல் விளக்குகிறது.
திருநீறு அணிவதால் ஏற்படும் நன்மைகள், சிறுநீரின் மருத்துவகுணங்கள் கூறப்பட்டுள்ளன.
"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று கூறும் திருமூலர் உடம்பை வளர்க்க எவ்வாறு உண்ண வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் கூறியுள்ளார். மனமும் உடலும் நலம் பெற இயற்கை சார்ந்த மருத்துவமுறையாக திருமூலர் கூறும் மருத்துவமுறைகள் உள்ளன என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது.