எங்கிருந்தோ வந்தான் - முத்துவேலன்; பக்.88; ரூ.90; டிஸ்கவரி புக் பேலஸ்(பி) லிமிடெட், சென்னை-78; )044- 4855 7525.
பல்வேறு நாளிதழ்களில் பணியாற்றிய மரபுக்கவிஞரான நூலாசிரியரின் 13 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
தெருவில் திரியும் நாய்கள் மீதான நேசத்தை "குட்டிம்மா', "ஆச்சிவீடு' சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, பொருளாதாரரீதியில் ஆதாயமடைகிற கருப்பசாமியின் அரசியல் நுழைவும் அவனுடைய ஜால்ராக்கள் படுத்தும்பாடும் " ஓட்டை சட்டிகள்' கதையில் பதிவாகியுள்ளது. ரெளடிகள் மீது பொதுமக்களுக்கு கடுமையான வெறுப்பு இருந்தாலும் ஏதும் செய்ய முடியாமல் கையறுநிலையில் இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் நூலாசிரியர்.
"ஆதிக்கக் காலணி', "அன்பே பிரதானம்', "எங்கிருந்தோ வந்தான்', "ஆற்றில் போன தீட்டு' கதைகளில் புராதனமும் தொன்மையும் பரவியிருக்கும் மதுரை நகரின் நவீன முகத்தைச் சித்திரித்துள்ளார். மகனைக் காப்பாற்றப் போய் ரயிலில் சிக்கி பலியான தாயைப் பற்றிய மீள்நினைவு "அர்ச்சனை மலர்' சிறுகதை.
நூலாசிரியர் தனது அனுபவங்களையும், கேள்விப்பட்ட சம்பவங்களையும் புனைகதைகளின் விழியே வெளிப்படுத்தியுள்ளார். பெரும்பாலான கதைகளில் நாடகத்தன்மை மிகுந்து காணப்படுவதும் கதையாடலில் தொய்வு இருப்பதும் தொகுப்பின் பலவீனம்.