தாவரத் தரகன் (கட்டுரைகள்) - ஜெயபாஸ்கரன்; பக்.200; ரூ.200; வழுதி வெளியீட்டகம், சென்னை-41; 044 - 2451 5559.
தினமணி நாளிதழ், ரெளத்திரம், அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.
நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரை, வேலிகாத்தானை ஒழிப்பது பற்றிய "தாவரத் தரகன்' கட்டுரை, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் செல்லும் வாகனங்களைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் பள்ளி வாகனங்கள் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரை, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகளைப் பற்றிச் சொல்லும் கட்டுரை என பலவிதமான விஷயங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஆராய்கின்றன.
படைப்புச் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் எத்தகைய தரத்திலான படைப்புகளுக்கு நாம் சுதந்திரம் கோருகிறோம், நமது படைப்புகளுக்கான சமூக நோக்கம் என்ன, பயன்கள் எவை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று "பாழ்படுத்தும் பாட்டுத்திறன்' கட்டுரை கேட்டுக் கொள்கிறது.
ஊழல், பொய்யான தரகு ஒப்பந்தம், அலட்சியம், அக்கறையின்மை போன்ற கெடுங் கூறுகளின் கலவைகளே மக்களுக்கான நலத்திட்டங்களாக முன் வைக்கப்படுகின்றன என்று "எவருக்கான நலத்திட்டங்கள் இவை?' என்ற கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
மிகுந்த சமூக அக்கறையுடன் சமகாலப் பிரச்னைகளைப் பேசி அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அற்புதமான கட்டுரைகள் அடங்கிய நூல்.