மக்கள் தங்களுடைய சக மனிதர்களைவிட கணினியை நம்புவதாக ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கணினிமயம் நிறைந்துவிட்ட உலகில் அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. சாதாரண கணக்கியல் முதல் அறிவியல் கண்டுபிடிப்புகள் வரை டிஜிட்டலும் தொழில்நுட்பமும் தான் பெருகி வருகின்றன.
கணினியின் மூலமாக வேலைகளை விரைவாக சிறப்பாக செய்துமுடிக்க முடிகிறது, நமக்குத் தேவையானவற்றை தேவையான நேரத்தில் நினைவுபடுத்துகிறது. அலகாரிதம், ப்ரோக்ராம் மூலமாக எந்தவொரு சிறப்பு செயலையும் செய்து முடிவைக் காண முடிகிறது என்பதால் பலதரப்பட்ட மக்களிடம் கணினியின் பயன்பாடு பரந்து விரிந்துள்ளது.
இதனால், பிளேலிஸ்ட்டில் அடுத்த பாடலைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து சரியான அளவு பேண்ட்டைத் தேர்ந்தெடுப்பது வரை, மக்கள் அன்றாட முடிவுகளை எடுக்கவும் தங்கள் வாழ்க்கையை சீராக்கவும் கணினி வழிமுறைகளின் ஆலோசனையையே நாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | அதிக ஓய்வு நேரமும் ஆபத்துதான்!
இந்நிலையில், ஜார்ஜியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சியின்படி, மக்கள் தங்கள் சக மனிதர்களைவிட ஒரு கணினி நிரலை நம்புவதற்கு அதிக விருப்பத்துடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு பணி மிகவும் சவாலானதாக இருந்தால் அந்த நேரத்தில் மனிதர்களைவிட கணினி இயந்திரத்தையே நம்புவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆய்வின் கண்டுபிடிப்புகள் 'நேச்சர்ஸ் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வாளர் போகெர்ட் 'ஒரு பணி கடினமாக இருக்கும் சூழ்நிலையில் மக்கள், கணினியை சார்ந்திருக்கின்றனர். மற்ற நபர்களின் ஆலோசனையைப் பெறுவதைவிட கணினியை சார்ந்திருப்பது சரியாக இருக்கும் என்று கருதுகின்றனர். சுமார் 1,500 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன என்றார்.
'மனிதர்கள், இயந்திரங்களின் முடிவுகளையும், அவர்கள் எப்படி அதனை நம்புகிறார்கள் என்பதையும், அது அவர்களின் நடத்தையை எப்படி மாற்றுகிறது என்பதையும் கண்டுபிடிப்பதே எங்களது அடுத்த இறுதி இலக்காகும். இப்போதைய ஆய்வு இதற்கு அடிப்படையாக இருக்கும்' என்று ஆய்வாளர் ஸ்கெட்டர் கூறினார்.
இறுதியாக, தரவுகளை மிகவும் துல்லியமாக தருவதால் வேலைகளை எளிதாக முடிப்பதால் மனிதனுக்கு கடினமான சூழ்நிலைகளில் சக மனிதர்களைவிட ஒரு கணினி தேவைப்படுவது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இளநீர் எப்போது அருந்த வேண்டும்?