நம் பாரம்பரிய தானியமான அரிசியை தினந்தோறும் பயன்படுத்துகிறோம். இதில் சாதம் செய்வதற்கோ, அரிசி மாவு செய்வதற்கோ அரிசியை ஊற வைக்கும் அந்த தண்ணீரை பெரும்பாலும் வீணாக்குகிறோம்.
காய்கறிகளை கழுவுவதற்கு இந்த அரிசி களைந்த/ ஊற வைத்த தண்ணீரை சிலர் பயன்படுத்துவார்கள். அதேபோன்று அரிசி ஊற வைத்த தண்ணீரை அழகான சருமம் மற்றும் கூந்தலைப் பெற பயன்படுத்தலாம். அரிசி ஊற வைத்த நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
முதல்முறை கழுவிய நீரை எதற்கும் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அரசியில் மேற்படியில் உள்ள தூசுகள் அதில் கலந்திருக்கும். இரண்டாம் முறை கழுவிய நீரை பொதுவாக காய்கறிகளை கழுவதற்கு பயன்படுத்தலாம்.
அதன்பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் வரை அரசியை ஊற வைத்த தண்ணீரை சருமத்திற்கும், கூந்தலுக்கும் பயன்படுத்துங்கள்.
அரிசி ஊற வைத்த நீரைக் கொண்டு முகத்தை கழுவும்போது, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் தன்மை கொண்டது இந்த நீர். நன்றாக இந்த தண்ணீரை வைத்து முகத்தை கழுவிய பின்னர் சுத்தமான காட்டன் துணியால் முகத்தை துடைத்தெடுங்கள். இப்படி செய்வதால் சருமம் ஆரோக்கியத்துடன், பொலிவுடனும் இருக்கும்.
இதேபோன்று மென்மையான ஆரோக்கியமான கூந்தலைப் பெற அரிசி ஊற வைத்த தண்ணீரைக் கொண்டு கூந்தலை அலசி விட்டு பின்னர் சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த/வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்துவர கூந்தல் பளபளப்பாகும்.
மேலும், அரிசி கழுவிய/ ஊறவைத்த நீரை குடித்தாலும் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.