விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வியாழக்கிழமை இரவு லாரியில் கடத்தப்படவிருந்த 12 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி சாமி வரம் காலனியில் உள்ள நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் ஒரு லாரியில் ரேஷன் கடையில் இருந்த அரிசி மூட்டைகள் ஏற்றப்படுவதை பார்த்த மக்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மக்களின் தகவலின்பேரில் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு வட்டாட்சியர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இவர்களைப் பார்த்து லாரி ஓட்டுநர் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் லாரியை சிவகாசியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு போலீசார் கொண்டு சென்று அங்கு லாரியை ஒப்படைத்தனர்.
சாமிபுரம் காலனியில் உள்ள நியாய விலை கடை பொறுப்பாளர் முத்துகிருஷ்ணனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடையிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டாராம். கடத்தப்படவிருந்த லாரியில் 12 டன் ரேஷன் அரிசி மற்றும் நூறு மூட்டை உப்பு இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நியாய விலை கடை பொறுப்பாளர் முத்துகிருஷ்ணனிடம் குடிமைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.