மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி மூலவர் முத்துமாரியம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிளக்கு பூஜை வழிபாட்டின் போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த தயாபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன்.
அதன் பின்னர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை வழிபாட்டில் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி பூஜைகள் நடத்தினர்.
திருவிளக்கு பூஜை முடிந்ததும் முத்துமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவிளக்கு பூஜை வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சுப்பிரமணியன் பூசாரி செய்திருந்தார்.