வாழப்பாடி: புடலங்காய் விலை போகாததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர், மூட்டை மூட்டையாக புடலங்காய்களை சாலையில் கொட்டிய சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த, பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். உணவகங்கள், சிற்றுண்டி உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. திருமணங்கள், திருவிழாக்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.இதனால் வாழப்பாடி பகுதியில் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
காய்கறிகளை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவிற்கு கூட விலை கட்டுப்படி ஆகாததால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை வாழப்பாடி தினசரி மண்டிக்கு புடலங்காயை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயி ஒருவர், விலை போகாததால் விரக்தியடைந்து போனார்.
சாலையில் கொட்டிய புடலங்காய்களை முண்டியடித்துக்கொண்டு அந்த காய்களை அள்ளிச் செல்லும் பொதுமக்கள்.
மூட்டை மூட்டையாக புடலங்காய்களை கொண்டு சென்று வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே, நடு சாலையில் கொட்டினார். இதனை கண்ட இப்பகுதியில் இருந்த பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு அந்த காய்களை அள்ளிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் துறையினர், அப்பகுதிக்கு விரைந்து வந்து காய்களை கொட்டிய விவசாயி மற்றும் பொதுமக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
காய் விலை போகாததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர், மூட்டை மூட்டையாக புடலங்காய்களை சாலையில் கொட்டிய சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.