குஜராத் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ‘காங்கிரஸ் கட்சியை அடக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது’ என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திங்கள்கிழமை பேசினார்.
குஜராத் மாநிலத்தில் வரும் நவம்பர் 3ஆம் தேதி 8 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதைமுன்னிட்டு வல்சாத் மாவட்டத்தின் கப்ராடா நகரில் பாஜக வேட்பாளர் ஜிது சவுத்ரிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ரூபானி பேசுகையில்,
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சிதைந்து வருகின்றது. தற்போது அந்த கட்சி மூழ்கும் கப்பல். குஜராத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா செய்ததால் தான் தற்போது இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர்களின் தலைமை மீது நம்பிக்கை இல்லை, ராகுல் காந்தியின் வழிநடத்தும் திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றது.
சவப்பெட்டியில் காங்கிரஸை வைத்து கடைசி ஆணி அடித்து அடக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது.
இந்த இடைத்தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் பின்னடைவை சந்திக்கும் என பேசினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த எட்டு எம்.எல்.ஏ.க்களில், சவுத்ரி உட்பட ஐந்து பேர் பாஜகவில் சேர்ந்தனர், ஆளும் பாஜக கட்சி அவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.