சி.எஸ்.ஐ.ஆர். - யு.ஜி.சி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கணித அறிவியல், ரசாயன அறிவியல் தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடைபெறவிருந்த நிலையில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பேருந்து சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தென்னக ரயில்வே சார்பில் ரயில் போக்குவரத்தும் ஒரு சில பகுதிகளுக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
நிவர் புயல் தீவிரமடைந்து புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலைக்குள் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தேசிய தகுதி தேர்வுகள் (நெட்) நாளை நடைபெறாது என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.