கோவை: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், வெங்கய்ய நாயுடு பேசியதாவது: விவாத கலாசாரத்தை தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஊக்குவிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசித்து விவாதித்து அதன்பிறகு முடிவு எடுக்க வேண்டும் என்பதையே இந்த அரசாங்கமும் விரும்புகிறது. அதன்படியே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குடியுரிமைத் திருத்த சட்டம் போன்றவை விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன.
குடியுரிமைத் திருத்த சட்டம் இந்திய மக்களுக்கு எந்த விதத்திலும் எதிரானது இல்லை. அது குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாமலேயே சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் எதிர்ப்புகளை பதிவு செய்வதற்கும் எல்லா உரிமைகளையும் சட்டம் வழங்கியுள்ளது.
ஆனால் ஒருபோதும் வன்முறையை அனுமதிக்கக்கூடாது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களான காஷ்மீர் விவகாரம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றை சில மேற்கத்திய நாடுகள் விவாதிக்க விரும்புகின்றன. ஆனால் பிரெக்சிட் போன்ற விவகாரங்களை நாங்கள் விவாதித்தால் என்னவாகும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பிஎஸ்ஜி நிறுவன அறங்காவலர் கார்த்திகேயன் முதல்வர் பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.