புதுதில்லி: அப்பல்லோ மருத்துவமனை எண்டர்பிரைசஸ் நிறுவனம் மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 60 சதவீதம் அதிகரித்து ரூ.144 கோடியாக உள்ளது.
2021-22 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.90 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வருவாய் ரூ.3,546 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.4,302 கோடியானது என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், நிறுவனம் ரூ.819 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது 2022ம் நிதியாண்டில் ரூ.1,056 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் வருவாய் ரூ.14,663 கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகரித்து ரூ.16,612 கோடியானது.
உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவையை வழங்குவதற்கான எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் நாங்கள் புதிய உயரங்களை எட்டிப்பிடிக்க முடிந்தது என்று அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னோக்கிப் பார்க்கையில், அறுவை சிகிச்சை முறைகளை மாற்றியமைத்து விளைவுகளை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்ட ரோபாட்டிக்ஸ் உள்பட சிறந்த கவனிப்பை செயல்படுத்த சிறந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
டிஜிட்டல் ஆரோக்கியத்தில் எங்கள் கவனத்தையும் நாங்கள் தொடர்கிறோம், மேலும் தரமான சுகாதாரத்தை மிகவும் அணுகக்கூடியதாக மாற்றும் திறனில் மகத்தான நம்பிக்கை உள்ளது என்றா் ரெட்டி.