மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் 2023ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில் வருடாந்திர லாபம் ரூ.10,282 கோடி பதிவு செய்ததையடுத்து அதன் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 5 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து வர்த்தகமானது.
இன்றைய பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டிலும் இந்த பங்கு 5.31 சதவீதம் உயர்ந்து ரூ.1,350ஆக வர்த்தகமானது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 18 சதவீதம் உயர்ந்து ரூ.2,637 கோடியாகவும், 2023ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வருடாந்திர லாபம் ரூ.10,282 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
2022-2024ம் நிதியாண்டின் மூன்று ஆண்டு சுழற்சிக்கான மூலதன செலவின ஒதுக்கீட்டை ரூ.15,075 கோடியிலிருந்து ரூ.15,900 கோடியாக உயர்த்தியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
மும்பையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் 2021-22ம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.2,237 கோடியாக உள்ளது.
2023ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வருவாய் ரூ.25,934 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.32,366 கோடியானது.
மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், இந்த நிறுவனம் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபமாக ரூ.10,282 கோடியை பதிவு செய்தது. இது 2022ம் நிதியாண்டில் ரூ.6,577 கோடியிலிருந்து 56 சதவீதம் அதிகரித்துள்ளது.
2023ம் நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ஒரு நிதியாண்டில் பதிவான அதிகபட்ச லாபம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.1,21,269 கோடியாக அதிகரிப்பு. இதுவே 2021-22ம் நிதியாண்டில் ரூ.90,171 கோடியாக இருந்தது. இது 34 சதவீதம் அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.