பிந்த் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில அந்த ஹெலிகாப்டர் திடீரென பிந்த் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவிக்கவே அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு உதவ மற்றொரு ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. எனினும் அனைத்து பணியாளர்களும் விமானமும் பாதுகாப்பாக உள்ளதாக விமானப் படை தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஹெலிகாப்டர் வயல்வெளியில் தரையிறக்கப்பட்டதை அறிந்த கிராமத்தினர் அதனைக் காண அப்பகுதியில் கூடினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.