நாடு முழுவதும் 94.30 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனி அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 9 மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களின் கீழ் மாற்றுத் திறனாளிகள் பலனடையும் நோக்கில் அவா்களுக்கென தனி அடையாள அட்டையை மத்திய அரசு விநியோகித்து வருகிறது. இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள தனி அடையாள அட்டைகள் குறித்த விவரங்களை மத்திய சமூக நீதி-மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 716 மாவட்டங்களில் 94.30 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், மேற்கு வங்கத்தில் வெறும் 9 மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய, சமூக நீதி-மேம்பாட்டு அமைச்சா் வீரேந்திர குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மாற்றுத் திறனாளிகளுக்குத் தனி அடையாள அட்டை விநியோகிக்கும் பணியை விரைவுபடுத்துமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அரசு அலுவலகங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை 1,671 அரசு அலுவலகக் கட்டடங்களில் இது தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 1,314 கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு ரூ.562.09 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை மத்திய பொதுப் பணித் துறை மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.