விபத்துக்கு பிறகு மீண்டும் இன்று மாலை ஷாலிமாரில் இருந்து கோரமண்டல் விரைவு ரயில் தனது சேவையை தொடங்கவுள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், பாலசோா் மாவட்டம், பாஹாநகா பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த ரயிலின் தடம்புரண்ட பெட்டிகள் மீது அவ்வழியாக வேகமாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில் மோதியது.
இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில் தண்டவாளங்கள் கடுமையாக சேதமடைந்தன.
தொடர்ந்து ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை மீண்டும் அவ்வழியே ரயில் சேவைகள் தொடங்கியது.
சென்னையிலிருந்து ஷாலிமார் நோக்கி திங்கள்கிழமை காலை 10.45 மணியளவில் புறப்பட்ட கோரமண்டல் ரயில், விபத்து நடந்த பகுதியை செவ்வாய்க்கிழமை கடந்து ஷாலிமார் சென்றடைந்தது.
இந்நிலையில், விபத்துக்கு பிறகு அதே வழித்தடத்தில் முதல்முறையாக ஷாலிமாரில் இருந்து இன்று மாலை 3.20 மணிக்கு வழக்கம்போல் கோரமண்டல் விரைவு ரயில் கிளம்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.