மின் கட்டண உயர்வால், கட்டணத்தை செலுத்த முடியவில்லையென்றால், ஃபேன் சுவிட்சைப் போடாதீர்கள். மரத்தின் கீழே உட்காருங்கள் என்று அசாம் மாநில பேரவைத் தலைவர் பிஸ்வாஜித் தைமாரி தெரிவித்துள்ளார்.
அசாமில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, அடிக்கடி மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து கடும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. விமரிசனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கும் அவைத் தலைவர் பிஸ்வாஜித் தைமாரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. மின் கட்டணத்தை உங்களால் செலுத்த முடியவில்லை என்றால், ஃபேன் சுவிட்சைப் போடாதீர்கள். மரத்தின் கீழே அமர்ந்துகொள்ளங்கள் என்று மக்களுக்கு மிகவு எளிமையான முறையில் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
மாநில அரசு, மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்துதான் வாங்குகிறது. அவை மின் விலையை அதிகரித்துவிடுகின்றன. அப்போது அரசு என்ன செய்யும்? மின் கட்டணத்தைத்தான் அதிகரிக்க முடியும் என்றும் பாஜக தலைவர் தைமாரி கூறியிருக்கிறார்.
இதை ஒரு பிரச்னையாக ஆக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அவர், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. பாஜக தலைமையிலான அரசு, அசாம் மாநிலத்தை மீண்டும் கற்காலத்துக்குக் கொண்டு செல்கிறது என்றும் கூறியிருக்கிறது.