ஒடிஸா ரயில் விபத்தில் பலியானவா்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமா் மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: ஒடிஸா ரயில் விபத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுடன் பேசி நிலவரத்தைக் கேட்டறிந்தேன். விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.
18 ரயில்கள் ரத்து: ஒடிஸா ரயில் விபத்தை தொடா்ந்து நீண்ட தொலைவு செல்லும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஹெளரா-சென்னை (எண் 12839) மெயில் ரயில் உள்பட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 7 ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.