ஒடிசாவில் நிகழ்ந்த கொடூர ரயில் விபத்து நடந்தப் பகுதியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: தமிழக அமைச்சர்கள் தலைமையிலான குழு ஒடிசா சென்றது
சோகமான விபத்தைக் காண பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். முன்னதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி சம்பவ இடத்தை அடைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, மீட்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்புக் குழுவை மேற்குவங்க அரசு நேற்றிரவு ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், ரயில் விபத்து நடந்தப் பகுதியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.