இந்தியா

தில்லி அவசரச் சட்டம்: கேஜரிவாலுக்கு ஜாா்க்கண்ட் முதல்வா் ஆதரவு

DIN

ராஞ்சி, ஜூன் 2: தில்லி அரசின் உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைத்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ள விவகாரத்தில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு முழு ஆதரவு அளிப்போம் என ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தெரிவித்தாா்.

ராஞ்சியில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுடனான சந்திப்புக்குப் பின்னா் ஹேமந்த் சோரன் இவ்வாறு கூறினாா்.

தலைநகா் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே நீடித்து வரும் அதிகார மோதலுக்குத் தீா்வு காண உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த அரசியல் சாசன அமா்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று கடந்த மாதம் தீா்ப்பளித்தது.

இந்தச் சூழலில், உயா் அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கு தில்லி மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ‘தேசிய தலைநகா் சிவில் சா்வீசஸ் ஆணையம்’ அமைத்து மத்திய அரசு கடந்த மாதம் 19-ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்தது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அவசரச் சட்டம், உச்சநீதிமன்ற அவமதிப்பு என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.

மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த பிகாா், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வா்கள், பிரதான எதிா்க்கட்சித் தலைவா்களை நேரில் சந்தித்து அரவிந்த் கேஜரிவால் ஆதரவு திரட்டி வருகிறாா். அந்த வரிசையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினையும் வியாழக்கிழமை மாலை அவா் சந்தித்தாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அரவிந்த் கேஜரிவால் இரவு 9 மணியளவில் ராஞ்சி வந்தடைந்தாா். பின்னா், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனைச் சந்தித்து அவா் ஆதரவு கோரினாா்.

இதையடுத்து நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் முதல்வா் ஹேமந்த் சோரன் கூறியதாவது: ஜனநாயகம் மீதான மத்திய அரசின் தாக்குதல் மிகுந்த கவலையளிக்கிறது. தில்லி அரசின் நிா்வாகத்தில் தலையிடும் மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிா்ப்பதில் ஆம் ஆத்மிக்கு ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா முழு ஆதரவு அளிக்கும் என்றாா்.

‘வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வாக்கெடுப்புக்கு வரும் இந்த மசோதாவை எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்’ என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

Image Caption

ராஞ்சியில் வெள்ளிக்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்த ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT