பாலாசோர்: ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான பகுதிக்கு தமிழக அமைச்சர்கள் தலைமையிலான குழு சென்றடைந்தது.
ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே, சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 238 பேர் பலியாகினர். 900 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தமிழக பயணிகளை சென்னை அழைத்து வர சென்னையிலிருந்து சிறப்பு ரயில் புவனேஸ்வரம் செல்கிறது.
பெங்களூரு - ஹௌரா அதிவிரைவு ரயில், ஷாலிமர்-சென்னை சென்டிரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்று என மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின.
விபத்துப் பகுதிக்குச் சென்று விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவும் வகையில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தமிழக போக்குவரத்து செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் உள்ளிட்ட குழு சென்னையிலிருந்து புறப்பட்டது.
மீட்புப் பணிகளில் உதவுவதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஒடிசா சென்றடைந்துள்ளது.
அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து தமிழக குழு, அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்கள். தமிழர்கள் சிகிச்சைபெற்று வரும் மருத்துவமனைகளுக்கும் இவர்கள் நேரில் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.