பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கூட்டம் பாட்னாவில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்த கூட்டத்திற்கு பங்கேற்க காங்கிரஸ், திரிணமூல், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி), இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமாஜ்வாதி தலைவரும், உத்தரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் இந்நிகழ்வில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மேட்டூர் அணை திறக்கும் நிகழ்வு உள்ளதால் இக்கூட்டத்தில் பங்கேற்க இயலாத சூழல் உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.