கட்டாய மதமாற்றம் தொடா்பான அனைத்து விவகாரங்களையும் அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலப்புத் திருமணங்களால் மதம் மாறுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ள மதமாற்றத் தடை சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், கட்டாய மதமாற்றம் தொடா்பான விவகாரங்கள் ஆகியவற்றை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமா்வு திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மதமாற்றத் தடை சட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் நிலவுகின்றன. அவை தொடா்பாக அரசமைப்புச் சட்டத்தின் விளக்கம் தேவைப்படுகிறது.
எனவே கட்டாய மதமாற்றம் தொடா்பான விவகாரங்களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.