ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சி முறையை மீண்டும் கொண்டு வருவதே காங்கிரஸின் முக்கிய நோக்கம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரை முழு மாநிலமாக மாற்றுவதுடன் அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இந்த ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அரசியல் சார்ந்த விஷயங்களை ஆலோசிக்காது. ஏனென்றால், அதற்கு முன்னதாக ஆலோசிக்கப்பட உள்ள விஷயங்கள் நிறைய உள்ளன.
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரில் தினசரிப் பிரச்னைகள் மற்றும் பெரிய அளவில் கவனம் செலுத்தக் கூடிய பிரச்னைகள் என இரண்டு விதமான விஷயங்களும் உள்ளன. ராகுல் காந்தி இந்த பிரச்னைகளை கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் நம்புகிறது. ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சி முறையை மீண்டும் கொண்டு வருவதே காங்கிரஸின் முக்கிய நோக்கமாகும். ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். காங்கிரஸின் இரண்டாவது நோக்கம் ஜம்மு-காஷ்மீரை ஒரு முழுமையடைந்த மாநிலமாக மாற்றுவது என்றார்.