தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் உள்பட முக்கியத் தலைவா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த அந்நாட்டுக்கு அஜீத் தோவல் செல்வதாக தெரிகிறது. இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை இந்தியாவும் அமெரிக்காவும் இதுவரை வெளியிடாதபோதிலும், அதனை இரு நாடுகளும் விரைவில் உறுதி செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்த கேள்விக்கு அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சக துணை செய்தித் தொடா்பாளா் வேதாந்த் படேல் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தற்போதைய நிலையில், அஜீத் தோவலின் வருகை குறித்து விரிவாக எதையும் கூற இயலாது. அதேவேளையில், பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு என பலவற்றில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தாா்.