தெலங்கானாவின் வராங்கல் மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வராங்கலில் காக்கத்தீயா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்துவந்தார் மாணவி ப்ரீத்தி. அதே மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்துவந்த மாணவர் ஆசிப்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிப் தன்னை ராகிங் செய்வதாக ப்ரீத்தி பலமுறை பெற்றோரிடம் புகார் கூறினார். இதுதொடர்பாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டது. இருவரையும் பேசி அனுப்பினர்.
இந்நிலையில், ப்ரீத்தி அறுவை சிகிச்சையின்போது வழங்கப்படும் அனஸ்தீசியாவை தனது உடலில் அதிகளவில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, மாணவி உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக ஐதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே, ப்ரீத்திக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனாலும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ப்ரீத்தி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் முதுகலை மருத்துவ மாணவர் ஆசிப்பை பிடித்து விசாரணை நடத்தினார். மாணவியை ராகிங் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
ப்ரீத்தியின் உடல் உடற்கூராய்வு செய்து சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ப்ரீத்தியை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.