இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என மணீஷ் சிசோடியா கைது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தது.
இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, இன்று(திங்கள்கிழமை) சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே மணீஷ் சிசோடியா கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர், பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து, 'தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக எப்படி தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா ஆஜர்!