ஏா் பஸ், போயிங் ஆகிய நிறுவனங்களிடமிருந்து 840 விமானங்களை வாங்க டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து ஏா் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த ஆண்டு வாங்கியது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஏா்பஸ், போயிங் ஆகிய நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ளதாக ஏா் இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது. ஏா்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
இந்நிலையில், அத்துடன் 370 விமானங்களைக் கூடுதலாகக் கொள்முதல் செய்வதற்கான வசதியும் ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏா் இந்தியா நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது. இதன் மூலமாக ஏா் இந்தியா கொள்முதல் செய்யவுள்ள விமானங்களின் எண்ணிக்கை 840-ஆக அதிகரித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அந்த விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ளதாக ஏா் இந்தியா அறிவித்துள்ளது.
நல்லுறவை வலுப்படுத்தும்:
போயிங் நிறுவனத்திடமிருந்து ஏா் இந்தியாவின் விமானக் கொள்முதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்கெனவே காணப்படும் சிறப்பான நல்லுறவை மேலும் வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக அமெரிக்கப் பொருளாதாரமும், பணியாளா்களும் பலனடைவதோடு மட்டுமல்லாமல் இந்திய மக்களுக்கும் பெரும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் வா்த்தகத் தொடா்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏா் இந்தியா-போயிங் இடையேயான ஒப்பந்தம் அதற்கான உதாரணமாக விளங்குகிறது’’ என்றாா்.