ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடல்நலம் பாதித்த மனைவியுடன் சென்ற நிலையில், அவர் வழியிலேயே பலியானதால், மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
கையில் பணமில்லாமலும், அமரர் ஊர்தியை அழைக்க வழியில்லாததாலும், பல கிலோ மீட்டர் தொலைவுக்கு மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி வந்து கொண்டிருந்த நபரை பார்த்த காவல்துறையினர், உடனடியாக வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க.. காதலர் தினம் 'மாடு அணைப்பு நாளா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் சங்கிவலசாவில் உள்ள மருத்துவமனையில், பங்கி தனது மனைவி குரு (30)வை அனுமதித்திருந்தார். சிகிச்சையில் அவர் குணமடையாததால், மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
மருத்துவமனையில் இருந்து ஒரு ஆட்டோவில் குருவை ஏற்றிக் கொண்டு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடிசா மாநிலம் சொராதா கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தார். ஆனால், வழியிலேயே குரு இறந்துவிட்டதால், ஆட்டோ ஓட்டுநர் பங்கியையும் அவரது மனைவியின் உடலையும் வழியிலேயே இறக்கிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
செய்வதறியாது தவித்துப்போன பங்கி, மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி தன் ஊரை நோக்கி நடந்தார். 20 கிலோ மீட்டர் இப்படியே அவர் நடந்து வர இன்னமும் 80 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது வீடு வந்து சேர.
இதனைப் பார்த்த பொதுமக்கள், உள்ளூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அவர்கள், பங்கியிடம் விசாரித்தனர். அவர் பேசும் மொழி ஆந்திர காவல்துறையினருக்குப் புரியாததால், ஒடிசா மொழி பேசும் ஒருவர் அழைத்து வரப்பட்டு அவரிடம் பங்கி என்ன சொல்கிறார் என்று கேட்டறியப்பட்டு, அவருக்கு வாகனம் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் பங்கி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு சொந்த ஊர் நோக்கிப் புறப்பட்டார்.