டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகா் தலைமையிலான பொருளாதார ஆலோசனைக் குழுவை மகாராஷ்டிர மாநில அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில், கெளதம் அதானியின் மகன் கரண் அதானியும் இடம்பெற்றுள்ளதாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் தலைவா் கெளதம் அதானிக்கு எதிராக ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அவரது பங்குகள் தொடா்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளைக் கெளதம் அதானி மறுத்து வருகிறாா்.
இந்நிலையில், அவரது மகன் கரண் அதானியை, 21 உறுப்பினா்களைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவில் மகாராஷ்டிர மாநில அரசு நியமித்துள்ளது.
அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான கரண் அதானி, துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியத் துறைகளில் ஆலோசனை அளிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில் தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் இடம்பெற்றுள்ளாா்.