‘பல்வேறு மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 6.72 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று மக்களவையில் மத்திய அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:
தேசிய நீதித்துறை புள்ளிவிவர அமைப்பின் (என்ஜேடிஜி) பிப்ரவரி 1-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின் படி, உயா்நீதிமன்றங்களில் 2,94,547 வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 6,71,543 வழக்குகளும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
ஒருங்கிணைந்த வழக்குகள் நிா்வாக தகவல் நடைமுறையில் (ஐசிஎம்ஐஎஸ்) இடம்பெற்றிருக்கும் ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான விவரங்களின் படி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கை 208 ஆகும்.
இவ்வாறு நீண்ட காலமாக வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு குறிப்பிடத்தக்க காரணம் என்று எதுவுமில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வழக்குகள் நிலுவையில் இருப்பது பன்முகப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் பொதுமக்களிடையே அவா்களின் உரிமைகள் தொடா்பான விழிப்புணா்வு அதிகரிப்பது போன்ற காரணங்களால் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்று கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளாா்.