புது தில்லி: புதிய வரி விதிப்பு முறை, பழைய வரி விதிப்பு முறை ஆகிய அல்லோலகல்லோலத்தில் நாட்டின் மிக முக்கிய பிரச்னையான தனிநபர் சேமிப்பு புறந்தள்ளப்பட்டுவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெரும்பான்மையான மக்களுக்கு அரசு அளிக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், அவர்களது தனிப்பட்ட சேமிப்பு ஒன்று அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய வரி விதிப்பு முறை என்ற மர்மம் அவிழ்க்கப்பட்டுள்ளது. பட்ஜெட் குறித்து செய்தித்தாள்களில் இன்று வெளியான பல்வேறு ஆய்வுகள் மற்றும் அட்டவணைகளையும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.
பெரும்பான்மை மக்களுக்கு மத்திய அரசின் பொது பட்ஜெட் துரோகம் இழைத்திருப்பதாகவும், இரக்கமற்ற பட்ஜெட் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருவேளை நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தால், உடனடியாக எந்த முடிவுக்கும் வந்து விட முனைய வேண்டாம். முதலில் உங்கள் வருமானத்தைக் கணக்கிடுங்கள். பிறகு, ஒரு கணக்குத் தணிக்கையாளரின் ஆலோசனையை பெறுங்கள் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான வேறுபாடு அதிகரிப்பது ஆகியவற்றை கவனம் செலுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகவே கருதுகிறேன் என்றும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.