காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமை நடுநிலைமை வகிப்பதாக கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன்(செப். 30) முடிவடைகிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதுபோல ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என். திரிபாதி என்பவரும் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். மேலும் மல்லிகார்ஜுன கார்கேவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | காங். தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே போட்டி; திக்விஜய் சிங் விலகல்!
இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், 'நாடு முழுவதுமிருந்து எனக்கு ஆதரவாக இருப்பவர்களின் நம்பிக்கையை நான் வீணடிக்க மாட்டேன். தேர்தலில் இருந்து விலக மாட்டேன்.
இந்த தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, மாற்றத்தை கொண்டுவரும் கட்சியாக இருக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் நடுநிலை வகிப்பதாக நேரு குடும்பம் எனக்கு உறுதியளித்தது. அந்த உணர்வில்தான் நானும் வேட்புமனுவை முன்வைத்தேன். இது யாரையும் அவமதிப்பதற்காக அல்ல, நட்புரீதியான போட்டி.
மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதை வரவேற்கிறேன். கட்சியின் நலனுக்காக மேலும் பலர் போட்டியிட வேண்டும். நாங்கள் எதிரிகள் அல்ல. நாங்கள் சக ஊழியர்கள். கட்சி முன்னேறுவதைப் பார்ப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்' என்றார்.