பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை யாத்திரை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பதற்றமடையச் செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் புதிய ராகுல் காந்தி மற்றும் புதிய காங்கிரஸ் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி தலைமையில் ஒற்றுமை நடைப்பயணம் தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. பின்னர் கேரளத்தில் தொடர்ந்த இந்த பயணம் தமிழகத்தின் கூடலூர் வழியாக கர்நாடகத்திற்கு இன்று (செப்டம்பர் 30) வந்தடைந்தது.
இதையும் படிக்க: தேசிய விருதைப் பெற்றார் நடிகர் சூர்யா!
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஒற்றுமை நடைப்பயணம் குறித்து அவர் கூறியதாவது: “ காங்கிரஸ் பாரதத்தை இணைப்போம் என்ற பெயரில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மக்கள் யார் இந்த பாரதத்தை உடைத்தார்கள் தற்போது இணைப்பதற்கு எனக் கேட்டால் எங்களது பதில், மோடியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் என்பதாகவே இருக்கும். ஏனெனில், நாட்டில் பொருளாதார சமத்துவம் இல்லாத சூழல் அதிகரித்துள்ளது. அதிகாரங்கள் மத்திய அரசிடமே குவிந்து வருகிறது. மாநிலங்களின் குரல்களுக்கு மதிப்பின்றி போகிறது. அதனால் தான் பாரதத்தை இணைக்கும் இந்த ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த யாத்திரை காங்கிரஸுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் போன்றது. காங்கிரஸின் பலம் அதிகரித்து வருவதைக் கண்டு பாஜக பதற்றமடைந்துள்ளது. இந்த ஒற்றுமை நடைப்பயணம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் இந்த ஒற்றுமை யாத்திரையின் மூலம் புதிய ராகுல் காந்தி மற்றும் புதிய காங்கிரஸ் உருவாகியுள்ளது.” என்றார்.