நாடு முழுவதும் பிஎஃப்ஐ தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்றது.
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் ‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் செப்.22-ல் சோதனை நடத்தினா்.
பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகள் ஆகியவற்றில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து சோதனை நடத்தின. சோதனையின் முடிவில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கேரளத்தில் 22 பேரும், தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகம், அசாம், தில்லி, மகாராஷ்டிரம், தெலுங்கானா ஆகிய 7 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் மாநில காவல் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் தில்லியில் என்ஐஏ நடத்திய பல சோதனைகளின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 45 உறுப்பினர்களை காவல்துறையினரால் கைது செய்தனர்.