ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் கட்சியின் தலைவர் சோனியா காந்தி.
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதால் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற கட்சியின் முடிவின்படி, அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சச்சின் பைலட் முதல்வராக அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சச்சின் பைலட் முதல்வரானால் 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளது கட்சியிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | கெலாட் vs பைலட்: ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? காங்கிரஸுக்குப் பின்னடைவா?
ராஜஸ்தானில் அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பொதுச் செயலாளர் அஜய் மேகனும் ஜெய்ப்பூர் சென்று கெலாட், சச்சின் பைலட் ஆகியோரிடம் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்ட பின்னர் மீண்டும் தில்லி திரும்பியுள்ளனர். இவர்கள் சோனியா காந்தியை சந்தித்துப் பேசுகின்றனர்.
அதுபோல காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலும் கேரளத்தில் இருந்து தில்லி திரும்பியுள்ளார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதனால், ராஜஸ்தான் பிரச்னை குறித்து சோனியா காந்தி விரைவில் முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.
இதையும் படிக்க | அசோக் கெலாட்டுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு