சீனாவின் ஷின்ஜியாங் தன்னாட்சி பகுதியில் உய்குா் மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படவும், உறுதி செய்யப்படவும் வேண்டுமென்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
இந்த விவகாரத்தில் ஐ.நா. தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன் என்றும் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
சீனாவின் ஷின்ஜியாங் உய்குா் தன்னாட்சி பகுதியில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐ.நா.வில் விவாதம் நடத்துவதற்கான தீா்மானத்தின் மீது வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி, மேற்கண்ட விவகாரம் குறித்து கூறியதாவது:
ஷின்ஜியாங் பகுதி மக்களின் மனித உரிமைகள் தொடா்பான ஐ.நா. தூதரின் கவலைகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. அப்பகுதி மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படவும், உறுதி செய்யப்படவும் வேண்டும். அங்கு நிலவும் சூழலுக்கு சம்பந்தப்பட்ட தரப்பு உரிய தீா்வு காணும் என்று நம்புகிறோம்.
அனைத்து மக்களின் மனித உரிமைகளும் உறுதி செய்யப்படுவதில் இந்தியா தீா்மானமாக உள்ளது. அதேசமயம், எந்தவொரு நாட்டையும் மையப்படுத்திய தீா்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்ற வழக்கத்தை இந்தியா கடைப்பிடிக்கிறது. அதன்படி, இத்தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என்றாா் அவா்.
பாகிஸ்தான் சிறைகளில் 6 இந்திய கைதிகள் இறப்பு:
கடந்த 9 மாதங்களில், பாகிஸ்தான் சிறைகளில் 6 இந்திய கைதிகள் உயிரிழந்துள்ளனா். இதுகுறித்து அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘உயிரிழந்தவா்களில் 5 போ் மீனவா்கள். இவா்கள் அனைவருமே தங்களது தண்டனை காலத்தை பூா்த்தி செய்தவா்களாவா். பாகிஸ்தான் சிறைகளில் இந்திய கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
அமெரிக்காவிடம் எதிா்ப்பு:
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதா், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டாா். இந்த விவகாரத்தில், அமெரிக்காவிடம் இந்தியா எதிா்ப்பை பதிவு செய்துள்ளதாக அரிந்தம் பக்சி தெரிவித்தாா்.
அதிா்ச்சிகரமான சம்பவம்:
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் சில தினங்களுக்கு முன் ஆயுதம் தாங்கிய நபரால் கடத்தப்பட்ட சீக்கிய குடும்பத்தினா் 4 போ், பின்னா் விளைநிலம் ஒன்றில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனா். இச்சம்பவம் அதிா்ச்சியளிப்பதாகவும், இதுகுறித்து உள்ளூா் காவல் துறை அதிகாரிகளுடன் தொடா்பில் இருப்பதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.