ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணத்திற்கு மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரௌத் என்ற நபர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் ஜார்க்கண்ட மாநிலத்தின் பால்கி கிராமத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மாருதி குமாரி (19 வயது) என்பது விசாரணையில் தெரிய வந்தது. மாருதி குமாரி மற்றும் ராஜேஷ் ரௌத் கடந்த மூன்று ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ராஜேஷ் ரௌத்திற்கு திருமணம் ஆகியுள்ளது.
இந்நிலையில், மாருதி குமாரிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ் ரௌத், மாருதி குமாரியின் வீட்டிற்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் சிறிது தீ பரவிய பிறகே தன்மீது தீ வைக்கப்பட்டுள்ளது மாருதி குமாரிக்கு தெரிய வந்தது. பின்னர், அந்த வழியாக ராஜேஷ் தப்பித்து ஓடுவதை மாருதி குமாரி பார்த்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ''அசிங்கம், நான் இந்தியாவுக்கு திரும்ப வர மாட்டேன்'' - இயக்குநர் பகிர்ந்த படத்தால் நடிகை கோபம்
உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மாருதி குமாரி பலத்த தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது நிலை மோசமானதால் ராஞ்சியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மாருதி குமாரி கூறியதாவது: “ எனக்கு ராஜேஷ் ரௌத் என்பவரை 2019இல் இருந்து தெரியும். அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தார். ஆனால், எனது குடும்பத்தில் உள்ளவர்கள் அவருக்கு என்னைத் திருமணம் செய்து வைக்கத் தயாராக இல்லை. இதற்கிடையில், அவருக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பாக அவர் என்னை சந்தித்து, நீ யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என மிரட்டினார். பின்னர், நான் எனது பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி ஓடினார்.” என்றார்.