புதுதில்லி: புதுதில்லியில் சென்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.360 கோடி செலவில் புதிய பிரதமர் இல்லம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.360 கோடி செலவில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்துடன் கூடிய வளாகப் பணி கட்டுமானம் விரைவில் தொடங்க உள்ளது.
மத்திய பொதுப்பணித்துறை ரூ.360 கோடி மதிப்பிலான பிரதமரின் குடியிருப்பு வளாகத்தை கட்டுவதற்கு டெண்டர் வழங்கப்பட்ட நாளிலிருந்து 21 மாதங்களுக்குள் கட்டி முடிப்பதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தாரா ஷிகோ சாலையில் அமையவுள்ள பிரதமரின் புதிய இல்லம் இரண்டு தளங்களைக் கொண்டதாகவும், புதிய குடியிருப்பு வளாகத்தில் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளம் மற்றும் விருந்தினர் இல்லம், சிறப்பு பாதுகாப்பு குழு அலுவலகம், துணை பணியாளர்கள் குடியிருப்பு, மத்திய பொதுப்பணித் துறை அலுவலகம் போன்றவை பாதுகாப்பு நிறைந்தவையாக சிமென்ட் கான்கிரீட் கட்டமைப்பு கொண்ட கட்டடமாக கட்டப்பட உள்ளதாகவும், இந்த வளாகத்தில் நான்கு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், அத்துடன் 25 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர் இல்லம் மற்றும் சவுத் பிளாக்கிற்கு அடுத்ததாக மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வளாகம் கட்டப்படுகிறது.
பிரதமருக்கான புதிய குடியிருப்பு வளாகத்தை ரூ.360 கோடி செலவில் கட்டுவதற்கான டெண்டர்கள் முதலில் இந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டன, ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு எந்த விளக்கமும் இல்லாமல் 'நிர்வாக காரணங்களை' மேற்கோள்காட்டி, திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.