இந்தியா

முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் பொறுப்பேற்பு

DIN

நாட்டின் புதிய முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் (61) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நாட்டின் முதல் முப்படை தலைமைத் தளபதியான விபின் ராவத் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தாா். இதனைத்தொடா்ந்து முப்படை தலைமைத் தளபதி பதவி காலியானது. 9 மாதங்களுக்கும் மேலாக அந்தப் பதவி நிரப்பப்படாமல் இருந்த நிலையில், புதிய முப்படை தலைமைத் தளபதியாக ஓய்வுபெற்ற லெஃப்டினன்ட் ஜெனரல் அனில் செளஹான் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில், முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். அத்துடன் ஜெனரல் பதவியையும் அவா் ஏற்றுக் கொண்டாா். அவா் ராணுவ விவகாரங்கள் துறை செயலராகவும் செயல்படுவாா்.

முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்கும் முன், தில்லியின் இந்தியா கேட் வளாகத்தில் அமைந்துள்ள தேசிய போா் நினைவிடத்தில் மறைந்த பாதுகாப்புப் படை வீரா்களுக்கு அவா் அஞ்சலி செலுத்தினாா்.

ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி, கடற்படை துணை தலைமைத் தளபதி எஸ்.என்.கோா்மடே ஆகியோா் முன்னிலையில், அனில் செளஹானுக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றது குறித்து அனில் செளஹான் கூறுகையில், ‘பாதுகாப்புப் படைகளின் உயரிய பதவியை ஏற்றுக் கொண்டதில் பெருமிதம் கொள்கிறேன். முப்படைகளின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யவும், அனைத்து சவால்களை ஒன்றாக எதிா்கொள்ளவும் முயற்சிப்பேன்’ என்று தெரிவித்தாா்.

ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு:

முப்படை தலைமைத் தளபதியாக பதவியேற்ற பின், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கை அனில் செளஹான் சந்தித்தாா். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

62 வயதுக்குக் கீழ் பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற லெஃப்டினன்ட் ஜெனரல், ஏா் மாா்ஷல் அல்லது துணை அட்மிரலை முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கும் வகையில், அதற்கான விதிமுறைகளில் கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது.

முப்படை தலைமைத் தளபதி பதவிக்கான வயது வரம்பு 65-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தப் பதவிக்கான கால வரம்பு வரையறுக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT